Archives: 26/03/2020

இரட்சிப்பைக் காணல்

தன்னுடைய ஐம்பத்திமூன்றாம் வயதில், சோனியா தன்னுடைய தொழிலையும், தன் தேசத்தையும் விட்டு விட்டு, அடைக்கலம் தேடி, வேறு இடத்திற்கு பிரயாணம் பண்ணும் ஒரு கூட்டத்தினரோடு சேர்ந்து கொள்ளும்படி தள்ளப்பட்டாள். ஒரு தீவிரவாதக் கூட்டம் அவளுடைய உறவினரான ஒருவரைக் கொலை செய்ததோடு, அவளுடைய பதினேழு வயது மகனை, அவர்களின் கூட்டத்தில் சேரும்படி கட்டாயப் படுத்தியது. சோனியாவிற்கு அவ்விடத்தைவிட்டு தப்பிச் செல்வதைத் தவிர வேறு வழிதோன்றவில்லை.  “தேவனே, நான் எது தேவையோ அதைச் செய்வேன்,…..எதுவானாலும் செய்வேன், ஆனால் நானும் என்னுடைய மகனும் பட்டினியால் சாகக் கூடாது,……..அவன் அங்கே ஒரு சாக்கினுள் கட்டுண்டவனாகவோ அல்லது ஓர் ஓடையில் தூக்கி வீசப்பட்டவனாகவோ சாவதை விட, இங்கே கஷ்டப் பட்டாலும் அதையே விரும்புகின்றேன்” என்று ஜெபித்தாள்.

சோனியா மற்றும் அவளுடைய மகனுக்கும், அவளைப் போன்று அநியாயத்தையும் பேரிழப்பையும் சந்திக்கின்ற அநேகருக்கும் வேதாகமம் என்ன கூறுகின்றது? இயேசுவின் வருகையைக் குறித்து யோவான் ஸ்நானகன் அறிவித்தபோதே, நமக்கும், சோனியாவிற்கும், இந்த உலகிற்கும் நற்செய்தியைக் கூறினார், “கர்த்தருக்கு வழியை ஆயத்தப் படுத்துங்கள்” என்று அறிவித்தார் (லூக். 3:3). மேலும் அவர் இயேசு வரும் போது, அவர் மிகுந்த வல்லமையுள்ளவராய் நம்மை முற்றிலும் விடுவிப்பார் என்றார், இந்த விடுதலையை வேதாகமம் இரட்சிப்பு எனக் குறிப்பிடுகின்றது.

இரட்சிப்பு என்பதன் மூலம் நம்முடைய பாவம் நிறைந்த இருதயத்திற்கு சுகம் கொடுப்பதோடு, ஒரு நாள் இவ்வுலகின் அத்தனை கொடுமைகளிலிருந்தும் விடுதலையைக் கொடுப்பார். அனைத்து சரித்திரமும் மாறும், ஒவ்வொரு மனித அமைப்பும் மாற்றம் பெறும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவன் தரும் மாற்றம் வரும். “மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” (வச. 5) என்று யோவான் கூறினார்.

நாம் எத்தகைய கொடுமைகளைச் சந்தித்தாலும், கிறிஸ்துவின் சிலுவையும் உயிர்த்தெழுதலும், நாம் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வோம் என உறுதியளிக்கின்றன. ஒரு நாள், அவர் தரும் பூரண விடுதலையை நாம் அநுபவிப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவோடு நிலைத்திருத்தல்

”தி பெல்லோஷிப் ஆப் த ரிங்” என்ற திரைப்படத்தில் கன்டாஃல்ப் த கிரே, சாருமான் தி வைட்டை எதிர்கொண்டபோது, அவர் மத்திய பூமியை பாதுகாக்க வேண்டிய செயலை செய்ய தவறிவிட்டார் என்பது தெளிவாகிறது. மேலும், சாருமன் சௌரோனுடன் கூட்டணி வைத்தான்! டேல்கியனின் உன்னதமான படைப்பை அடிப்படையாகக் கொண்ட அத்திரைப்படத்தின் இந்தக் காட்சியில், இரண்டு முன்னாள் நண்பர்கள், நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சாருமான் மட்டும் தன்னுடைய வழியில் உறுதியாய் நின்று தனக்குத் தெரிந்ததைச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். 

சவுல் ராஜாவுக்கும் தன்னுடைய வழியில் உறுதியாய் நிற்பதில் சிக்கல் இருந்தது. அவருடைய ஆட்சியில் ஓர் கட்டத்தில் “அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்தி விட்டான்” (1 சாமுவேல் 28:3). இது ஓர் நல்ல நடவடிக்கை. ஏனென்றால் மாயவித்தை காரியங்களில் ஈடுபடுவது கர்த்தருக்கு அருவருப்பானது (உபாகமம் 18:9-12) என்று ஏற்கனவே தேவன் அறிவித்திருந்தார். ஆனால் அவர் சில தோல்விகளை சந்தித்த பின்பு, பெலிஸ்தியர்களோடு யுத்தம்செய்தால் தேவன் தனக்கு வெற்றியைத் தருவாரா என்ற சவுலின் விண்ணப்பத்திற்கு தேவன் பதிலளிக்காதபோது, “அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்” (1 சாமுவேல் 28:7). சவுல் செய்யவேண்டியதை தவிர்த்து, முற்றிலும் தலைகீழானதை செய்ய விழைகிறான். 

அதிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இயேசு தம் சீஷர்களைப் பார்த்து, “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்” (மத்தேயு 5:37) என்று சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்கு நாம் நம்மை அர்ப்பணித்திருந்தால், நம்முடைய சத்தியங்களைக் கடைப்பிடிப்பதும் உண்மையாக இருப்பதும் இன்றியமையாதது. தேவன் நமக்கு கிருபையளிப்பதால் அவற்றை செய்வதில் நாம் உறுதியோடு செயல்படுவோம். 

 

நம்மைக் காத்துக்கொள்ள முயற்சித்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரம் “பாதுகாப்பாக இருங்கள், ஸ்டே புட்” என்ற விளம்பரப் பிரச்சாரம், மின்தூக்கியில் சிக்கிக்கொள்பவர்களின் அறிவூட்டலுக்காக ஏறெடுக்கப்பட்டது. அவ்வாறு சிக்கிக்கொண்ட பயணிகள் பயத்தில் மின்தூக்கியின் கதவை திறக்கமுயன்றபோதும், வேறு வழிகளில் வெளியேற முயன்றபோதும் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உதவிக்கு அழைப்பதற்கும், அவசரகால பதிலளிப்பவர்கள் வரும் வரை காத்திருப்பதற்கும் அலாரம் பொத்தானைப் பயன்படுத்துவதே அத்தருணத்தில் சிறந்த செயல்திட்டமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான மீட்புத் திட்டத்தை விவரித்தார். பாவத்தினால் பின்னாக இழுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அமைந்தது. அவர் எபேசியர்களுக்கு “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபேசியர் 2:1) என்று அவர்களுடைய முழுமையான ஆவிக்குரிய உதவியற்ற தன்மையை பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அவர்களும் பிசாசுக்கு கீழ்படிந்து அந்த வலையிலே சிக்கியிருந்தனர் (வச. 2). இதன் விளைவாக அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகினர். ஆனால் அவர் அவர்களை ஆவிக்குரிய இருளில் சிக்கவைக்கவில்லை. அந்தகார இருளில் இருந்த  நீங்கள் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (வச. 5,8) என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மீட்பு நம்முடைய விசுவாசத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. விசுவாசம் என்றால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது என்று தேவனிடத்தில் உதவிகோருவது என்ற அர்த்தம். 

தேவனுடைய கிருபையால், பாவத்தின் வலையில் இருந்து மீட்கப்படுவது நம்மிடம் இருந்து உருவானது அல்ல. இது இயேசுவின் மூலமாக நமக்கருளப்பட்ட “தேவனுடைய ஈவு” (வச. 8). 

 

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2). 

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம்.